தன்னை கைது செய்வதன் ஊடாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை, அச்சுறுத்திப் பார்க்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால், அதற்கு எவரும் அஞ்சக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், தனது லண்டன் விஜயம் உத்தியோகப்பூர்வமானது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தான் பதவியிலிருந்த காலத்தில் தனது மனைவியான மைத்ரி விக்ரமசிங்கவின், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட விஜயம் செய்ய, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் தான் சென்றது உத்தியோகபூர்வ விஜயமாகும்.
அதனைத் தான் நிரூபித்தும் தன்னை கைது செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் தனக்காக அனைத்து கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் ஒன்றிணைந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை என்பது நீண்டகாலமாக ஜனநாயகத்தின் வழியில் பயணிக்கும் நாடாகும்.
அந்த வகையில் செல்வந்த வர்க்கம் மாத்திரமல்ல சாதாரண மக்களும் நாட்டின் ஜனாதிபதியாக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே, ரணசிங்க பிரேமதாச, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாகத் தெரிவாகினர்.
இலங்கை நாட்டில் நீண்டகாலமாகப் பல கட்சி ஆட்சிமுறையே உள்ளது.
அதனை ஒழிக்க அரசாங்கம் முற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணமிது எனக் குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
