தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் நவீன் சூரியாரச்சியின் திடீர் மறைவு அறிந்து, நான் அதிர்ச்சியும் மிகுந்த வேதைனையும் அடைந்தேன். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
நமது நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், நாடு எதிர்பார்க்கும் புதிய மாற்றம் மற்றும் விரைவான அபிவிருத்தி விடயத்தில் பணியாற்றும் பலமான சக்தி, விவேகம், அர்ப்பணிப்பு, உற்சாகம் மற்றும் உறுதிப்பாடு கொண்ட நெருங்கிய நண்பரின் மறைவு, நமது நாடு இந்த நேரத்தில் எதிர்கொள்ளும் தாங்க முடியாத இழப்பாகும்.
நவீன் சூரியாரச்சி நமது நாட்டின் நிதித்துறையில் ஒரு தொழில் வல்லுநர் ஆவார். அவரது மறைவால் இத்துறை ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறது. ஒரு நாடாக நாம் எதிர்கொண்ட மிகக் கடுமையான மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில், பல தொழில் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் நமது நாடு மிகப்பெரிய மனித வளப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சூழலில், நவீன் சூரியாரச்சி போன்ற ஒரு சில நிபுணர்களின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ள பின்னணியில் அவரது மறைவு மிகவும் வேதனையளிக்கிறது.
மேலும், ஒரு சிறந்த நாட்டை உருவாக்க நீண்ட காலமாக எங்களுடன் இணைந்து பணியாற்றிய போராட்டத் தோழர், அந்த விடியலின் நிறம் பிரகாசமாகும் நேரத்தில் நம்மை விட்டு பிரிந்து செல்வது நமக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நவீன் சூரியாரச்சி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கை பிரகடனத்தின் நோக்கங்களை நனவாக்க அயராது உழைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கடந்த காலத்திலிருந்து சர்வதேச ரீதியில் புகழ்பெற்று விளங்கிய இலங்கையின் இரத்தினக்கல் தொழிற்துறை விழுந்திருந்த வீழ்ச்சிகரமான நிலையில் இருந்து மீட்பதற்காக குறுகிய காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
குறிப்பாக, இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத நம்மைப் போன்ற ஒரு நாட்டில், கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை அதிக செயல்திறனுடன் பயன்படுத்தி, அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கான மூலோபாயத் திட்டத்தை உருவாக்கி, அதன் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ள வலுவான தலைவரின் வழிகாட்டுதலும் வழிநடத்துதலும் இன்றியமையாததாக இருக்கும் நேரத்தில் இடம்பெற்ற இந்த இழப்பு, அந்தத் தொழில்துறைக்கும், நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத நட்டம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் சோகமான இந்த நேரத்தில், ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பணிக்குழாமினரினதும் ஆழ்ந்த அனுதாபங்களை நவீன் சூரியாரச்சியின் அன்பானவர்களுக்கும், குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதியாக, நவீன் சூரியாரச்சி, விரும்பியதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுமான சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காகத் தொடர்ச்சியாக உழைத்து, அவருக்குக் காட்டக்கூடிய உயர்ந்த நன்றியைத் தெரிவிக்க செயற்படுவதாக, அவர் மீதுள்ள கௌரவத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
