தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் இரசாயனப் பசளைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் துறையில் உள்ளவர்களுக்கு காலதாமதம் இன்றி பசளைகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் கீழ் விவசாயிகள் தமக்கு விரும்பிய இடத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தெங்கு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதனை ஊக்குவிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களின் கைவிடப்பட்ட பகுதிகளில், மீள் உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
