கொழும்பு துறைமுக நகரத்தில் இயங்கும் சீன நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை போன்ற போலி மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ரூ.13 கோடி பண மோசடி குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு வந்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இந்த குற்றத்தின் ஊடாக 459,460 அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறியது.
சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை வழங்கிய விசாரணை அதிகாரிகள், கொழும்பு துறைமுகத்தில் உள்ள சீன நிறுவனத்தின் மின்னஞ்சல் கணக்கை போலியாக உருவாக்கி ஒரு குழுவினரால் இந்த மோசடி செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு இலங்கை ரூபாயில் 138,072,329 என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட பிரதான நீதவான், உடனடியாக விசாரணை நடத்தி, சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
