காசா போருக்கு மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் கத்தார் தலைநகரில், ஹமாஸ் அரசியல் தலைவர்களின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கனடா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் வன்முறையின் “சகிக்க முடியாத விரிவாக்கம்” மற்றும் கத்தாரின் “இறையாண்மைக்கு” எதிரான செயல் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய தாக்குதல்கள் பிராந்தியம் முழுவதும் மோதலை தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்தகைய தாக்குதல்கள் ஆனவை அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல், பணயக்கைதிகளை விடுவித்தல், மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
இதேவேளை, கத்தார், இந்தத் தாக்குதலை “அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் எதிரான ஒரு அப்பட்டமான மீறல்” என்று கண்டித்துள்ளது.
