உக்ரைன் மீது ரஷ்யா, 800 ட்ரோன்களை கொண்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் அரச கட்டடமொன்றின் கூரை எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறியதாவது:
உக்ரைன் மீது 800 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதுநாள் வரையிலும் நடத்திய தாக்குதலில் இது எங்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ஆகும்.
ரஷ்யா, பல்வேறு வகையான 13 ஏவுகணைகளையும் ஏவியது. இந்த தாக்குதலின்போது, எங்களது படைகள், 747 ட்ரோன்களையும் 4 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் இடிபாடுகள் 8 இடங்களில் விழுந்தன.இதில் அரச கட்டடம் பெரும் சேதம் அடைந்தது.
இந்த கட்டடம் உக்ரைன் அமைச்சரவையின் தாயகமாகும், அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர். இவ்வாறு யூரி இஹ்னாட் கூறினார்.
