2025 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பரீட்சையில் பதிலளித்த விதம் குறித்து கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி வலியுறுத்தியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை பாதிக்க வேண்டாம் என்றும், இந்த பரீட்சை ஒரு சாதாரண பரீட்சை மட்டுமே என்பதால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புலமைப்பரிசில் பரீட்சையை மன அழுத்தமின்றி எதிர்கொள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகின்றனர். ஒவ்வொரு குழந்தையின் திறனும் வேறுபட்டவை. எனவே, பிள்ளைகளை ஒப்பிட்டு, அவர்கள் எழுதிய பதில்கள் குறித்து கேள்வி கேட்பதோ, தவறான பதில்களுக்கு திட்டுவதோ, தண்டிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்,” என்று ஆணையாளர் கூறினார்.
மேலும், “பிள்ளைகள் எவ்வாறு பதிலளித்தாலும், அவர்களின் குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்க முடியாது. புலமைப்பரிசில் பரீட்சை ஒரு தேர்வு மட்டுமே; இதை வைத்து குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்கள்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், மன அழுத்தமின்றி அவர்களை வளர்க்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
