இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள் , நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உறுதியான, நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் “ இலங்கை கடற்படையினரால் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இந்திய கடற்றொழிலாளர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்குக் கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், நிதி நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விடயத்தைத் திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
