இலங்கைக்கு கடத்துவதற்காக கொள்கலன் லொறியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரிஓடை கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலை பண்டல் கடத்தப்பட உள்ளதாக தெரியவந்தது. இதனடிப்படையில் இன்று காலையில் பொலிஸார் குறித்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த கொள்கலன் லொறியை பொலிஸார் மறித்ததும் லொறியில் இருந்தவர்கள் கடலில் தயார் நிலையில் இருந்த படகுமூலம் தப்பி ஓடியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட கொள்கலன் லொறியை சோதனை செய்ததில் அதில் மூடைகளில் பீடி இலை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2,250 கிலோ பீடி இலைகளையும் கொள்கலன் லொறியையும் பொலிஸார் இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கடத்தல்காரர்களை பொலிஸார் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
