அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் அவர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்…
1948முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல்,கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்ப்பட்டது.
அந்தவகையில் பல உலகத்தலைவர்கள் வந்து போய்விட்டார்கள் ஆனால் இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால் அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார்.
ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், அவரை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
