பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இசை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து தமிழ்ப் படங்களில் சின்மயி பாடல்களைப் பாடுவதில்லை. குறிப்பாக, 2020-க்கு பிறகு விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் பாடல்களையே சின்மயி பாடியிருக்கிறார்.
பாடல்கள் பாட முடியவில்லை; நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம் எனச் சென்றாலும், அங்கும் சின்மயிக்கு பிரச்னைகள் எழுந்துள்ளன. தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளுக்கு எதிராக சிலர் இருப்பதை உணர்ந்தவர், நீதிமன்றத்தை நாடி அன்றைய டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதா ரவி மற்றும் பொறுப்பாளர்கள் மீது குற்றம்சாட்டினார்.
இதனால், ஆத்திரமடைந்த ராதா ரவி, சின்மயி ஆண்டு சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறி அவரின் உறுப்பினர் அட்டையை இரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. சின்மயியால் கட்ட முடியாத சந்தா தொகை எவ்வளவு? ரூ. 250
அந்த ரூ. 250-க்காக இவ்வளவு திறமையான பாடகியை யாரும் பழிவாங்க மாட்டார்களே என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. இந்தத் தொகையை உறுப்பினர் கட்ட மறந்தால், நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? அழைத்து விஷயத்தைச் சொல்லத்தானே வேண்டும்? ஆனால், அதிரடியாக யூனியனிலிருந்து நீக்குவது நியாயமானதா?
சின்மயி தரப்பிலிருந்து அழுத்தமான கேள்வி ஒன்றையும் முன்வைக்கின்றனர். நடிகர் விஜய், நடிகை ஸ்ருதி ஹாசன், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்களுக்கு டப்பிங் யூனியனே சந்தா கட்டும்போது சின்மயிக்கு மட்டும் ஏன் செலுத்தவில்லை என்கின்றனர்.
