யாழ் கோட்டை மற்றும் யாழ் பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்வது தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் யாழ் மாவட்ட செயலாளர் கலந்துரையாடி உள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உற்கட்டுமாணம் மற்றும் சுற்றுலா துறைகளை விருத்தி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத்தரவுகளை பெற்றிருந்தது.
இதன் இறுதி அங்கமாக துறைசார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர்,
அந்த வகையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் திரு. அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு யாழ்பாண மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அதனைத் தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில்,
யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், மாவட்டத்திலுள்ள குளங்களை புணரமைக்கும் செயற்றிட்டம் , யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் அபிவிருத்தி செய்தல், யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம் ஆகிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இச் செயற்றிட்டங்கள் தொடர்பிலான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் உலக வங்கி குழுவினர் கோரியிருந்தனர்.
இக் கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்திற்கு உலக வங்கிக் குழுவினரை மாவட்ட செயலாளர் அழைத்துச் சென்று புணரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக விளக்கமளித்தார்.
