வௌிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்கியமைக்காக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிரல் அடையாளம் இன்றி கெஹெல்பத்தர பத்மேவின் கடவுச்சீட்டை குறித்த அதிகாரியே தயாரித்து வழங்கியிருக்கலாமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சந்தேகம் வௌியிட்டுள்ளது.
இந்த நிலையில் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரிக்க முயன்ற 2 சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இருவரும் கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நிழற்படங்களை WhatsApp செயலி ஊடாக பெற்று அதனை வடிவமைத்து குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கெஹெல்பத்தர பத்மே 2014ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டு வௌிநாடு சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த கடவுச்சீட்டானது கடந்த வருடத்துடன்(2024) உடன் காலாவதியாகியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர கெஹெல்பத்தர பத்மேவின் நிழற்படத்தை பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு பெயர்களில் மேலும் 2 போலி கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
