எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், அநீதிக்கு நீதி வேண்டியும் மே – 18 ஆம் நாளில் அணி திரள அழைத்து நிற்கின்றோம் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்விலே உங்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
தமிழின படுகொலையின் நாளாகிய மே.18 தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் , இந்த அநீதிக்கு நீதி வேண்டியும் மே – 18 ஆம் நாள் இந்த திரளிலே ஒன்று கூட அழைத்து நிற்கின்றோம்.
அன்றையதினம் 10.15 மணிக்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்படும் 10.29 க்கு நினைவொளிக்கு நினைவொளி எழுப்பபடும். 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்படும்.
இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்படும். அனைவரும் வருகை தந்து எம் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாமும் குரல் கொடுப்போம்.
கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்கின்ற அந்த விடயத்தை சர்வதேசம் வரை உரத்து சொல்ல இணைந்து கொள்வோம் என தெரிவித்தார்.