தமிழர் காணி சம்மந்தப்பட்ட விடயத்தை நியாயம் இல்லாமல் 3 மாத காலக்கெடு வழங்கி அரச உரிமை கோர முயல்வது அந்த காணிகளை இயற்கை நீதிக்கு புறம்பாக பறித்து அந்த காணிகளை குடியேற்றங்களுக்கு பயன்படுத்தப் போகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று (08.05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. விசேடமாக வடமாகாணத்தில் 4 மாவட்டத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 3669 ஏக்கரும், முல்லைத்தீவில் 1703 ஏக்கரும், கிளிநொச்சியில் 515 ஏக்கரும், மன்னாரை சேர்ந்த 54 ஏக்கருமாக மொத்தம் 5941 ஏக்கர் காணிகளை தனியார்கள் தங்களுக்குரிய காணி உறுதிகளை உறுதிப்படுத்தாத பட்சத்தில் அதனை அரச காணிகளாக பிரகடனப்படுத்த போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு சமமான சனத்தொகை இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்த தீவை விட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே வெளியேறினார்கள். அவர்களது அனைத்து சொத்துககளையும் விட்டு பெரும்பான்மையானவர்கள் அந்த நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கேட்கும் நிலை தான் இருந்தது.
இந்த காணிகளின் சொந்தக்காரர்கள் பலர் அந்த நாடுகளில் இருந்து திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் சில மக்களின் காணிகளை உறுதிப்படுத்த முடியாத நிலையும் இருக்கிறது. இதனை முதல் இருந்த அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்டு அவர்கள் முதல் இருந்த காணியில் இங்கு போர்க் காலத்தில் புதிதாக இருந்தவர்கள் உரிமை பெற முடியாத வகையில் சட்டத்தை வைத்திருந்தார்கள்.
புலம்பெயர் மக்களின் காணிகளுக்கு அநீதி நடைபெறும் என்பதற்காகவே அவை நிறுத்தப்பட்டன. இந்த அரசாங்கம் முதல் இருந்த அரசாங்கங்களை இனவாதி என்றார்கள். அவர்களே அந்த காணிகளை அபகரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்கள். அங்கு பிரச்சனை இருக்கிறது என்பதை விளங்கிக் கொண்டார்கள். இந்த அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்காமல் அமுல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காணி உரிமையாளர்கள் இந்த மூன்று மாதத்திற்குள் காணி உறுப்பத்திரங்களை உறுதிப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.
இது புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றி கதைக்கின்றோம். தற்போது வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கூட உரிமை கோரக் கூடிய நிலையில் இருந்தும் அவர்கள் பல தடவை இடம்பெயர வேண்டிய நிலை இருந்தது. போர் காரணமாக தமது அனைத்து சொத்துக்களையும் விட்டு ஓட வேண்டி வந்தது. அப்படிப்பட்ட நிலையில் இந்தக் காணிகளை உரிமை கோருமாறு கோருவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமா?. இந்தக் காணி சம்மந்தப்பட்ட பிரச்சனை தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையுடன் சம்மந்தப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இது இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா?
தமிழர் காணி சம்மந்தப்பட்ட விடயத்தை நியாயம் இல்லாமல் 3 மாத காலக்கெடு வழங்கி அரச உரிமை கோர முயல்வது அந்த காணிகளை இயற்கை நீதிக்கு புறம்பாக பறித்து அந்த காணிகளை குடியேற்றங்களுக்கு பயன்படுத்தப் போகிறார்கள். இதனை நான் பொறுப்போடு கூறுகின்றேன். இந்த அரசாங்கம் விடயம் விளங்காமல் அவசரமாக செய்யும் விடயம் அல்ல. நான் இதற்கு முதல் பல தடவை இந்த பாராளுமன்றத்திலும், வெளியிலும் சுட்டி காட்டி வருகின்றேன். வட-கிழக்கில் இருக்கும் இராணுவம், முப்படை முழுக்க அங்கு இருக்கும தமிழ் மக்களை எதிரி என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள்.
முதல் இருந்த அரசாங்கம் போல் இந்த அரசாங்கமும் அந்த மக்களுடைய உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை எனில் அந்த மக்கள் சிலவேளை போராட முயற்சிகலாம் என்ற பயத்தால் தமிழர் தாயக கரையோர பிரதேசங்கள் அனைத்தையும் போர்காலத்தில் கடற்தொழில்ல் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி பொருளாதார தடை இருந்தது. அதனால் அந்த மக்கள் வாழ முடியாத நிலையில் வெளியேறினார்கள். பேர்க்காலத்தில் இதை தான் செய்தீர்கள்.
அந்த மக்களுடைய நிரந்தர உரிமைகளை அழிக்கின்ற, பறிக்கின்ற செயற்பாட்டை இந்த அரசாங்கம் செய்யப் போகின்றது. முதல் இருந்த அரசாங்கங்கள் எல்லாம் இனவாதிகள், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று சொல்லி தம்மை புனிதர்களாக காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் இந்த அநியாயத்தை செய்யப் போகிறார்கள் என்பதை பொறுப்போடு சொல்கின்றேன்.
இதுவெறுமனே தமிழர்களை குறி வைக்கும் விடயமல்ல. தமிழ் பேசும் மக்களை குறிவைக்கும் விடயமாக மாறும். வேணும் என்றால் எழுதி வையுங்கள். இன்று வடக்கு மாகாணத்தை குறிவைக்கும் இவர்கள், அடுத்து இது கிழக்கு மாகாணத்திற்கும் போகும்.
இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. இந்த இரணுவத்தின் தமிழ் விரோத செயற்பாட்டை நிறுத்த, இராணுவத்தின் மனோ நிலைய மாற்ற இவர்களுக்கு ஏலாது. அலலது இவர்களும் இராணுவத்தின் மோசமான இனவாத செயற்பாடுகளுக்கு துணை போகும் வகையில் செயல்படுகிறார்கள் என்று தான் பார்க்கலாம்.
இந்த தேர்தலில் இந்த அரசாங்கம் வடக்கு – கிழக்கில் சந்தித்து இருக்கின்ற பாரிய பின்னடைவை சரியான கோணத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை சரியாக புரிந்து இந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும். காணி சமந்தமான பிரச்சனை தமிழ் மக்களது அடிப்படை பிரச்சனை. இதில் தமிழ் மக்கள் தலைவர்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வராமல் செய்யுமாக இருந்தால் மீண்டும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கும், தெற்கில் வாழும் தெற்கு மக்களுக்கும் ஏற்பட்டு வரும் நல்லிணக்கத்தை குழப்பும் விடயமாக தான் இருக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் எதிரி ஆக்கப் போகிறீர்கள் எனத் தெரிவித்தார்.