உலக நாடுகள் அனைத்தும் ரஷ்ய – உக்ரைன் போர் பற்றியே அதிகளவாக பேசிக் கொண்டிருக்கின்றது. ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் என அமெரிக்க மற்றும் ரஷ்ய நாடுகளின் தலைவர்கள் பேசும்போது ஒப்புக் கொண்டனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது,
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இருவரும் ரஷ்ய – உக்ரைன் போரில் அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவை பற்றி பேசி கொண்டனர்.
நீண்டகால அமைதியுடன் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான தேவை பற்றி தலைவர்கள் இருவரும் பேசி ஒப்பு கொண்டதுடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான தேவை பற்றியும் வலியுறுத்தினர்.
இதேபோன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, உக்ரைன் ஜனாதிபதியுடனும் ட்ரம்ப் பேசினார் என அவர் கூறியுள்ளார்.
போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் எரிசக்தி உட்கட்டமைப்புகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்படும் என கூறி, அதற்கான உத்தரவை புதின் பிறப்பித்து உள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன. எனினும், ஒரு விரிவான போர்நிறுத்த ஒப்பந்தம் அவசியம் என அமெரிக்கா கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.