ஒன்றாக இணைந்து பயணிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்குமேல் அது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கலந்துரையாடி முடிவெடுக்கும் என அந்த கட்சியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமது விருப்பத்தைத் தெரிவித்து சி.வி.கே.சிவஞானம் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதத்தை தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பியுள்ளார்.
“இன நலன் குறித்து கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒற்றுமை பற்றி தெரிவித்துள்ள விடயங்களில் எக் காலத்திலும் தாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்ல” என சித்தார்த்தன் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் சில இடங்களிலாவது ஒன்றாகப் போட்டியிடுவது பற்றி ஆராய விரும்பும் நீங்கள்,தற்போது நாம் அமைத்துள்ள கூட்டணி உங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாகவும், உங்கள் கட்சிக்குத் தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு தேர்தல்களைச் சந்திக்கும் நிலை கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பை அடுத்தே ஏற்பட்டது.
தனித்துப் போட்டியிட்டு பின்னர் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணக்கருவை. தங்களது மத்திய குழு மட்டக்களப்பில் கூடி எடுத்தீர்கள்.இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சி வெளியேறியது
பிரிந்து நின்று செயற்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை ஆணித்தரமாக நாம் முன்வைத்தபோதும் தமிழரசுக் கட்சியின் செயல் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த சம்பந்தன் அண்ணரிடம் எமது நிலைப்பாட்டை நாம் நேரடியாக முன்வைத்தபோதும் கூட அவரும் தமிழரசுக் கட்சியின் முடிவினை ஏற்று செயற்படுமாறு எம்மை அறிவுறுத்தினார்.
அன்று கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறிய பின்னர் நாமும் ரெலோ அமைப்பும் இயன்றவரையிலும் ஏனைய தமிழ் அமைப்புகளை ஐக்கியப்படுத்தி கூட்டமைப்பாக செயற்படும் நோக்கில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பாக பயணிக்கத் தொடங்கினோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் அங்கத்துவக் கட்சிகளினதும் தொடர்ச்சியான பிளவுகளினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஆழமாக உணர்ந்து கொண்டோம்.
மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து கட்சிகளாக இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாகப் போட்டியிட்ட நாம், நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒற்றுமை எனும் விடயத்தை மேலும் வலுவானதாக்க சாத்தியமான வகையில் மேலும் சில அமைப்புகளை இணைத்துப் பயணிக்கத் தீர்மானித்து தொடர்ச்சியாக மேற்கொண்ட செயற்பாடுகளின் பலனாகவே இன்று பல கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றை உருவாக்க முடிந்துள்ளது.