கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய நாடு முழுவதும் விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொலையின் பின்னர் அவர் காணாமல் போன நிலையில் பெண் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மதுகமவின் பல இடங்களில் நேற்று ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், பெண் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் , கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.