அழகுக்கலை நிபுணர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் முகமாக மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில் எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே. மேகலா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாற்று மோதிரம் நிகழ்வானது மணப்பெண் அலங்காரம் மற்றும் கண்காட்சி என்பவற்றுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில், அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டு வருவதற்கான ஒரு களமாக அந்நிகழ்வு அமையும்.
நிகழ்வில் திருமணத்திற்கான அனைத்தும் வழங்குநர்கள் இவ்வாறான கண்காட்சியில் இணைப்பதன் மூலமாக அவர்களும் தம்மை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்த முடியும்.
அதேவேளை அவர்களை கௌரவித்து, அவர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை வெளி உலகுக்கு அடையாளப்படுத்தவுள்ளோம்.
இம்முறை கிளிநொச்சி மண்ணில் இயக்கச்சி பகுதியில் உள்ள ரீச்சா பண்ணையில், பிரமாண்டமான முறையில் மாற்றுமோதிரம் நிகழ்வினை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என மேகலா தெரிவித்தார்.
அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலர் தெரிவிக்கையில்,
திருமணத்துடன் தொடர்புடைய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் வடக்கு கிழக்கில் வசிக்கும் யுவதிகளுக்கு இவ்வாறான நிகழ்வுகள் வரப்பிரசாதம் ஆகும்.
அருந்ததி நிறுவனம் அவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கிறது. இவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்றும் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் மணப்பெண் அலங்காரம் உள்ளிட்டவற்றுக்கு நல்ல வாய்ப்புக்கள் அதிகம். அங்கு வாழும் தமிழர்கள், தமிழ் முறைப்படியே திருமணங்கள் செய்கின்றனர். அதானல் வாய்ப்புக்கள் அதிகம். எனவே இவ்வாறான முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் வைட்ரீம் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஸ்குமரனும் கலந்து கொண்டிருந்தார்.