சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபேர்ட் பேடன் பவல் பிரபுவின் 168 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சாரண சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர்கள் வவுனியாவிலுள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.
சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இன்று (22.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்படி வவுனியா புகையிரத நிலையம், தாண்டிக்குளம் புகையிரத நிலையம், ஓமந்தை புகையிரத நிலையம், புளியங்குளம் புகையிரத நிலையம், செட்டிக்குளம் புகையிரத நிலையம் ஆகிய புகையிரத நிலையங்களை ஒரே நாளில், ஒரே நேரத்தில் அழகுபடுத்தும் செயற்பாடுகளில் வவுனியா சாரணர்கள் ஈடுபட்டனர்.
இத்திட்டம் தேசிய சாரணர் தலைமையகத்தின் கருத்தாக்கம் மற்றும் க்ளீன் சிறிலங்கா திட்டத்துடன் இணைந்து செயற்படும் தேசிய வேலைத்திட்டமாகும்.
இதன் பிரதான நிகழ்வு வவுனியா பிரதான புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. புகையிரத நிலையத்தினை சூழவுள்ள பகுதிகளிலுள்ள பிளாஸ்டிக், பொலித்தீன், ஏனைய கழிவுகளை அகற்றி புகையிரத நிலையத்தினை துய்மையான இடமாக மாற்றியமைத்தனர்.
இந்நிகழ்வில், வவுனியா புகையிரத திணைக்கள அதிபர் சி.அகிலேஸ்வரன், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தின் உதவி ஆணையாளர் எஸ்.மயூரன், மாவட்ட சாரணங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், உதவி மாவட்ட ஆணையாளர்கள், திரி சாரணர்கள், சமாதானத்திற்கான தூதுவர் குழுவினர், பொறுப்பாசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.