தமிழ் மக்கள் விரும்பும் கௌரவமான வாழ்வினையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனெவி யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.
தெல்லிப்பழையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் புதியதொரு மாற்றம் வேண்டுமென அனைத்து மக்களும் எமக்கு ஆதரவை வழங்கியிருக்கின்றனர். அத்தகைய மாற்றத்தின் பின்னர் முழு இலங்கையும் பாரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது.
இங்குள்ள மக்கள் அனைவரும் கடந்த தேர்தலில் எங்களுக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் மறந்து செயற்பட முடியாது. இந்தப் புதிய அரசாங்கம் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். என்பதற்காக எமக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆணையோடு நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தில் கூட எமது கட்சியில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள். அதனூடாக நீங்கள் அனைவரும் மீண்டுமொரு தடவை இலங்கைக்குள் இனவாதம் என்ற சொல்லை உச்சரிக்காத அளவுக்கு எம்மை அழைத்துள்ளீர்கள். ஆகையினால் கௌரவமான வாழ்வுக்கான உங்களின் எதிர்பார்ப்பைப் பாதுகாப்பதும் அதற்காகப் பணியாற்றுவதும் எமது பொறுப்பாகும்.
அத்தகைய பொறுப்பை மறந்து நாங்கள் செயற்படப்போவதில்லை. உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலையே எமது செயற்பாடுகள் அமையும் என மேலும் தெரிவித்தார்.