அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது மகனான ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.
போலி தகவல் வழங்கியது, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை சார்ந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
தமது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பைடன் கூறினார்.
“அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து நீதித்துறையின் முடிவில் தலையிடமாட்டேன் என்று தெரிவித்திருந்தேன். சொன்னபடி செய்துள்ளேன்.
என் மகன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவர் நியாயமற்ற வகையில் நடத்தப்பட்டபோதும் நான் தலையிடவில்லை,என்று பைடன் அறிக்கை வெளியிட்டார்.
ஹன்டர் பைடனின் சிறைத் தண்டனையை அதிபர் பைடன் குறைக்கமாட்டார் என்றும் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கமாட்டார் என்றும் வெள்ளை மாளிகை இதற்கு முன்பு தெரிவித்திருந்தது.
ஹன்டர் பைடன், போதைப் பித்தராக இருந்தவர் என்றும் அதிலிருந்து அவர் மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.