மெக்சிகோவில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் கிளாடியா ஜனாதிபதி ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் தெரிவு செய்யப்படுகிறார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து கிளாடியா ஷீன்பாம், ”நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
61 வயதான கிளாடியா ஷீன்பாம் எதிர் வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நகர மேயாரகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது