கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், மாகாணம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வடக்குப் பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்கான சஸ்காட்செவன் மாகாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவசரகால நிலை பிரகடனத்தை சஸ்காட்செவன் மாகாணப் பிரதமர் ஸ்காட் மோ செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அடுத்த 30 நாட்களுக்கு அமலில் இருக்கவுள்ள இந்த அவசரகால நிலையானது, தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.
கனடாவில் ஒரு மாகாணம் அவசரகால நிலைப் பிரகடனம் செய்வதன் மூலம், மத்திய அரசிடமிருந்து ஊழியர்கள், உபகரணங்கள் மற்றும் ராணுவத்தின்
பயன்பாடு உட்பட கூடுதல் வளங்களை பெற முடியும். சஸ்காட்செவன் மாகாணத்தில் 17 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்ததாகவும், அவற்றில் மூன்று மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூபெக் (Quebec) மற்றும் அலாஸ்காவிலிருந்து சென்றுள்ள (Alaska)
விமானங்கள் தற்போது சஸ்காட்செவனில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து (Prince Edward Island) மேலதிக தீயணைப்புப் படையினர் சஸ்காட்செவன் மாகாணம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவகையான காட்டுத்தீப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள மற்றொரு கனேடிய மாகாணமான மனிடோபாவின் முதல்வர் வாப் கினேவுடன் (Wab Kinew), சஸ்காட்செவன் மாகாண முதல்வர் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இரு மாகாணங்களும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவ முடியும் என்று ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
