இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு அங்கமாக, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கிளையினரால் இன்று (02) பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாததை சுட்டிக்காட்டியே குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையின் கல்விக்கான வை அழிக்காதே, கல்விசார் பணியாளர்களின் பற்றாக்குறைக்கு உடன் தீர்வு காணுங்கள், கல்விக்கான நிதியினை அதிகரிக்கவும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இந்த மதிய நேர போராட்டமானது பிரதானமாக, இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அது பிரதானமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகரித்த மாணவர் உள்வாங்கை, அதுதவிர்த்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள், மேலும் உயர்கல்விக்குரிய ஒதுக்கீடுகள் சம்பந்தமான கோரிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் வந்து இந்த மதிய நேர இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையிலே, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டு எங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுக்கொள்கிறோம்.



