அகில இலங்கை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 27 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 580 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பிராந்திய பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக, வலய மட்டத்திலான
பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 27,133 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 27 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 110 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 216 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும், கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 140 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4272 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


