உத்தியோகபூர்வ மொழிகளுக்கான புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கெல்லி பர்க் (Kelly Burke), கியூபெக்கில் வாழும் ஆங்கிலம் பேசும் சிறுபான்மைச் சமூகத்தினரின் (Anglophones) சட்டப்பூர்வ மொழி உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகக் கடுமையான சவால்களையும், உள்ளூர் அமைப்புகளின் தீவிரமான எதிர்பார்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளார். கியூபெக் அரசின் தீவிர பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், இந்த நியமனம் மாகாண அரசியலில் பெரிதும் அவதானிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் செனட் சபையின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான 8 ஆவது ஆணையராகக் கெல்லி பர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் ஆளும் CAQ கட்சி அரசாங்கம் கொண்டுவந்துள்ள “மசோதா 96″ மற்றும்”மசோதா 40” ஆகியவற்றால் கியூபெக் ஆங்கிலேயர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் அரச சேவை உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் இக்கட்டான சூழலில் இவர் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையராக பதவியேற்றுள்ளார்.
எனவே, இவர் வெறும் மத்திய அரசு விதிகளுக்கு மட்டும் கட்டுப்படாமல், கியூபெக் ஆங்கிலேயர்களின் கள யதார்த்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் மத்திய அரசு சார்பில் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் சிறுபான்மையின உரிமை அமைப்புகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
முன்னாள் ஒன்ராறியோ பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணையராக (French Language Services Commissioner) இருந்த கெல்லி பர்க், ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் பிரெஞ்சு சிறுபான்மையினரை (Franco-Ontarians) பாதுகாத்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார். கியூபெக்கில் உள்ள ஆங்கில மொழி உரிமைகளுக்கான கூட்டமைப்பு புதிய ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அதேவேளை, மாகாணத்தில் ஆங்கில வழிப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தன்னாட்சி
அதிகாரத்தை ஆளும் அரசு சிதைப்பதை எதிர்த்து அவர் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


