தமிழ் இளம் பாடகர், ஹிப் ஹாப் சங்கீத் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது நாடு மாறிக்கொண்டு வருகிறது.
இந்த விடயத்தில் உண்மையிலேயே அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ததை வன்மையாக நான் கண்டிக்கிறேன் என மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர சபையில் இன்று (05) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகரசபை தலைவர் என்ற ரீதியிலே, ஒரு தமிழன் என்ற ரீதியிலே, உண்மையிலேயே வன்மையான கண்டனங்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையிலே பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று நினைக்கும் போது, இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்று பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழர்களுக்கான உரிமையைக் கொடுப்போம், சமூக உரிமையை வழங்குவோம் என்று சொல்லி வந்த இந்த அரசாங்கம், இன்று பாட்டு பாடியதற்கு எமது இளைஞர் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள். உடனடியாக இந்த அரசாங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக அந்த இளம் பாடகரை விடுதலை செய்ய வேண்டும் என நான் இந்த ஊடகத்தின் ஊடாக கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு இந்த மண் விலையை குறைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் பல வழிகளிலே முயற்சி எடுத்தார்.நானும் அந்த முயற்சியிலே ஈடுபட்டேன். அந்த முயற்சியின் பலனாக 51,500 ஆயிரம் ரூபாய்க்கு மண் வழங்கப்படும் என மக்களுக்கு நாங்கள் சொல்லியிருந்தோம்.
ஒரு சிலருக்கு மட்டும் அந்த மண் இப்பொழுது கிடைக்க பெற்றிருக்கின்றது. ஏதோ காரணங்களால் மீண்டும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் 70,000ஆயிரம் முதல் , 80,000ஆயிரம் என மண் பறிக்கப்படுவதாக மக்களிடமிருந்து நமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
எனவே, உண்மையில் மண்ணை ஒழுங்குபடுத்திய எமது அரசாங்க அதிபரிடம் நான் மீண்டும் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த அதிக விலையில் மண்ணை பறிப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறான முறைப்பாடுகள் சான்றுகளோடு கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என நான் இந்த ஊடகத்தின் ஊடாக நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
