முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் 31 பேர் கடந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் வித்தியாலயத்தின் அதிபர் திரு மோகனஜீவன் தலைமையில் நேற்றைய தினம்(22) காலை 8.00 மணிக்கு முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கடந்த உயர்தரப் பெறுபேற்றில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி மிஸ்ராஜ் நிதா பாத்திமா விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் அதி விசேட சித்தியும் மாவட்ட ரீதியில் முதல் நிலையும் பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். அதேபோல் வர்த்தகப் பிரிவில் அன்ரனிற்ரா நிலுஜினி என்ற மாணவி மாவட்ட ரீதியில் முதல் நிலையினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு முதல்நிலை பெற்ற மாணவிகள் இருவருக்கும் மக்கள் வங்கி கிளையினால் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் போது முல்லைத்தீவு மகாவித்தியாலய அனைத்துலக பழைய மாணவர்கள் சங்கத்தினால் நிதி உதவியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இந்த நிகழ்வில் முல்லை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, பழைய மாணவ சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.
