பிராம்டன் நகரில் வீதியில் விழுந்த 30 வயது இளைஞர், சிகிச்சை கிடைக்காமல் வைத்தியசாலையில் மரணமடைந்த துயரம், தாயகத்திலுள்ள அவரது தாயாரையும் உறவுகளையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பே தனது கனடிய குடியுரிமையை பெற்றுக்கொண்ட ரெஜினால்ட் ரோபர்ட் கென்னடி என்ற இந்த இளைஞர், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் விரைவில் தாயகம் பயணம் செய்து தனது தாய், சகோதரர்கள் மற்றும் திருமணத்திற்கு ஒப்பந்தமான பெண்ணை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.
இவரது மரணத்திற்கு போலீசாரும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 13ம் தேதி மாலை 4 மணிக்கும் 4:30ற்குமிடையில், இந்த இளைஞர், பிராம்டன் வீதியில் சாதாரணமாக நடந்து வந்த காட்சி வீதி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. சிங்க்ஸ் குயின் மற்றும் சிங்க்ஸ் வீதிகள் சந்திப்பில், வீதி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு கம்பத்தில் சாய்ந்து நின்ற இவர், திடீரென கீழே விழுந்துள்ளார். அங்கே வந்த பேருந்து ஓட்டுனர் இதை கவனித்து போலீசை அழைத்துள்ளார்.
போலீசார் வந்தபோது, அவரிடம் கேள்விகள் கேட்டபோது, முழுமையான பதிலளிக்கும் நிலையில் இல்லாத இளைஞன், கேட்டதற்கெல்லாம், ஆம், ஆம், ஆம் என்று பதில் அளித்திருக்கிறார். போலீசின் கேள்வி, நீ குடித்திருக்கிறாயா என்பது. சரியாக விளக்கிக் கொள்ளக்கூடிய உடல்நிலையிலில்லாத இளைஞன், ஆம் என்று பதிலளித்திருக்கிறார்.
ஆனால், உடனே ஆம்புலன்ஸ் அழைத்து முதலுதவி செய்ய வேண்டிய போலீசார், அவருக்கு குடிபோதையில் இருந்ததாக அபராத சீட்டு எழுதி, அவரது செட் பொக்கெட்டில் வைத்துவிட்டு, அதன் பின்னரே ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்ததும், இவர் குடிபோதையில் இருப்பதாக அவர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் இந்த இளைஞரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, இவர் குடிபோதையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதால், உடனடி அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த வைத்தியர், தனது அறிக்கையில், அவரது உடலில் மது இருக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு தான்
அவர் விழுந்ததற்கான காரணம் என்று கூறியுள்ளார்.
அவருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இந்த இளைஞர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். எப்போதும் எல்லோருக்கும் உதவும் அற்புதமான எண்ணமும் உணர்வும் கொண்ட இந்த இளைஞர், தனது இறுதி நேரத்தில், தனது அனைத்து உடல் உறுப்புகளையும் தானமாக வழங்க இணங்கினார். அவரது இறப்பின் பின்னர், ஆறு நபர்கள் அவரது உடல் உறுப்பு தானத்தால் நன்மை அடைந்துள்ளனர்.
இவரது உடலை பார்க்க அவரது தாயார் விரும்பிய போதிலும், வருவதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலும் சிக்கல் நிலவுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பே இவர் கனடிய குடியுரிமை பெற்றதால், பாஸ்போர்ட் இவரிடம் இருக்கவில்லை. அதை பெறுவதற்கும் இவரது உறவினர்களோ குடும்பத்தினரோ இங்கே இல்லை.
இவருடன் வேலை செய்துக் கொண்டிருக்கும் ஒருவரே இவரது விபரங்களில் உதவி செய்து வருகிறார். மேலும் அந்த நபரின் மனைவி மிகுந்த பொறுப்புடன் இவரது தாயாருடன் தொடர்பில் இருக்கிறார். இவரது வேலை இட நண்பர்களும் அக்கறை காட்டி வருகின்றனர்.
இந்த நபரும் அவரது மனைவியும் போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர்கள் முதலில் தவிர்த்தாலும், பின்னர் பல கமரா பதிவுகளையும் பரிசீலித்த பின்னர், இவர் குடிபோதையில் இருந்ததாக தெரியவில்லை, சாதாரணமாகவே நடந்து வந்து, திடீரென கம்பத்தில் சாய்ந்து பின்னர் கீழே விழுந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளனர். மது அருந்தியதாக கொடுத்த
அபராத சீட்டு தவறு, அதை மீள பெறலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதுபற்றி விசாரணை வேண்டுமென கேட்டபோது, தாங்கள் உள்ளக ரீதியாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். பிராம்டன் நகரின் நகரபிதாவாக, தமிழர்கள் விடயத்தில் அக்கறை கொண்ட நெளரத் பிரவுன் அவர்கள் மற்றும் பிராம்டன் மற்றும் மிசிசாகாவை உள்ளடக்கிய பீல் பிராந்திய போலீஸ் அதிகாரியாக திரு. நிஷான் துரையப்பா என்ற
தமிழரும் பதவி வகிக்கின்றனர். இந்த இளைஞர் குடிபோதையில் இருந்தார் என்று, எந்த விதமான பரிசோதனையும் இல்லாமல் தீர்மானித்த போலீசார், இளைஞருக்கு அவசர மருத்துவ உதவி தேவை என்பதை கூட உணராமல் அபராதம் வழங்க முனைந்தது, அவர்களின் அனுபவமின்மை காரணமாகவோ அல்லது அலட்சியம் காரணமாகவோ இப்படி நடந்துகொண்டார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு இளம் தமிழ் இளைஞருக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரமும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பமும், நண்பர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இளைஞரின் உடல் இன்னும் பிராம்டனில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு இன்றி, அவரது தாயார் வருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் தங்கள் கைகளை விரித்துக் கொண்டிருக்கின்றன. சட்டரீதியான ஆலோசனை வழங்கக்கூடிய தமிழ் வழக்கறிஞர் அமைப்பு எதுவும் இல்லாத நிலைமை தொடர்கிறது. யாரிடம் ஆலோசனை கேட்பது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். இது கொடுமையிலும் கொடுமை. யார் கை கொடுப்பார்??
