யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்துள்ள வெற்றிலைக்கேணி கடற்படை அவர்கள் பயன்படுத்திய படகுகள், மற்றும் மின் உபகரணங்கள் உட்பட மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
நெற்றிரவு ஏப்ரல் 20 இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட டோரா தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த
நான்கு படகுகளில் சட்டவிரோத மின் ஒளி பாய்ச்சியும், மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தியும் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், இன்று அதிகாலை 01:30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10:30 மணியளவில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று நபர்கள் கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஆழியவளையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது
கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து 04 படகுகள் (Dinghies/FGD), வெளி இணைப்பு இயந்திரங்கள் (OBM), சுமார் 43 லிட்டர் மண்ணெண்ணெய், மின்கலங்கள் (Batteries), நீரில் மூழ்கிப் பயன்படுத்தக்கூடிய 11 மின்விளக்குகள், நங்கூரங்கள் மற்றும் 03 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் யமஹா 40 HP மற்றும் சுசுகி 25HP ஆகிய இயந்திரங்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் சான்றுப் பொருட்களாக மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் வளத்தை அழிக்கும் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
