மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டதோடு அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் மற்றும் இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட விவசாய மற்றும் கால்நடை சேதங்களை மதிப்பீடு செய்து, அவற்றிற்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
நிவாரணப் பணிகளில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலகம், உரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
