எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது. தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தடை வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றோம்.” இவ்வாறு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் எனப் பல தரப்பினரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா போன்றோர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியிறுத்தியுள்ளனர்.
இவர்களை விட தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் குழுவொன்றும் “மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும்” என்று கேட்டுள்ளது. இவர்களோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத், முன்னாள் அமைச்சரான புத்திக்க பத்திரன போன்றோரும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளனர். இவற்றோடு தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தும் வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தரப்புகள் என்பது கவனத்திற்குரியது.
மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளுநர்கள் தன்னிச்சையாகச் செலவு செய்கின்றனர் என்று இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் கொழும்பில் நடந்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது தயாசிறி ஜெயசேகர வெளிப்படையாகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
