ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மிச் நகர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வாச்சுக்குட்டி நெவ்பர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது
குறித்த நபரை கடந்த 21 திகதி ஞாயிற்றுக்கிழமை 2400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏறாவூர் பொலிசார் கைது செய்து 22ம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை இன்று 26 ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவ தினமான இன்று குறித்த நபருக்கு எதிரான வழக்கில் அவரை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு திறந்த நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.
திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் காலை 11.50 மணியளவில் சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று ஜன்னல் கம்பியில் தனது சாரத்தை கழற்றி கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதவானின் அனுமதி பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த நபருக்கு எதிராக இரண்டு திருட்டுக்கள் தொடர்பாகவும் இரண்டு போதை பொருள் தொடர்பாகவும் 4 வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
