ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஹட்டன், ஸ்ரீ பாத, மஸ்கெலியா, பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடை போன்ற பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள், பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த சோதனையின்போது பொது போக்குவரத்து வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பல நிறங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்கள், அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளின் பயன்பாடு உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் அகற்றி ஒழுங்குப்படுத்துவதற்கும் குறைபாடுகளை சரிசெய்வதற்கும் சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து ஒழுங்கும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சில சாரதிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் இதனை மீறும் சாரதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
