இந்தியாவின் மும்பை நகரில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த அச்சுறுத்தலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை மாநகர பொலிஸ் உதவி மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பையில் நுழைந்து விட்டதாகவும், அது வெடித்தால் மொத்த நகரமும் அழிந்து விடும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மும்பை போக்குவரத்து பொலிஸாரின் வட்ஸ்அப் இலக்கத்திற்கும் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த செய்தியில், லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து இந்த தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மும்பை பொலிஸார், மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதோடு, இந்த அச்சுறுத்தல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.f
