தம்பிலுவில் புதைக்குழியை அண்டிய பகுதியில் இன்று மாலை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கருணா – பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகாவாக செயல்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டன.
பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட இப்பகுதியில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் பங்கேற்றனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி, மற்றொரு சந்தேக நபரான அனோசியஸ் சுரேஸ்கண்ணாவின் வாக்குமூலத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் பலனளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
