யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ள 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது .
தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம்.
அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
