வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு விவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சீதையம்மன் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக நுவரெலியா மாவட்டத்தினதும் இந்த நாட்டினதும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அது ஒரு உந்து சக்தியாக அமையும் என தெரிவித்துள்ளார்.
நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அசோக வனம் அனுஸ்ரீ தியாண மண்டபத்தை திறந்து வைத்து இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் ,
சீதையம்மன் ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக காணியை பெற்றுத் தருமாறு ஆலயத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார் நாங்கள் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணியை பெற்றுக் கொடுக்க நாம் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.
இன்று இந்த மண்டபத்தை அமைப்பதற்கு முழுமையான நிதி பங்களிப்பை செய்துள்ள இந்தியாவின் டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடும்பத்தினருக்கு எங்களுடைய முழுமையான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
இது உண்மையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருங்கிய கலாசார உறவை மேம்படுத்துவதற்கு அது உதவியாக இருக்கும்.குறிப்பாக தற்போது எங்கள் நாட்டிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகை தருகின்றார்கள்.அதிகமானவர்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக இங்கு வருகை தருகின்றார்கள்.
சுற்றுலா துறையை பொறுத்த அளவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர் பெறுமதியான வருமானத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.எதிர்வருகின்ற ஆறு மாத காலத்தில் இன்னும் 3.7 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்.அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் அரசாங்கம் என்ற வகையில் மேற்கொண்டு வருகின்றோம்.
பொருளாதார ரீதியான பின்னடைந்துள்ள எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நாம் நிச்சயமாக சுற்றுலாத்தறையை அபிவிருத்தி செய்து அதன் மூலமாக வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இராமாயணத்துடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.அதன் ஊடாக நாம் இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முடியும்.இது காலத்தின் தேவையாகவும் அமைந்துள்ளது.
அதே போல இந்த ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த ஆலயத்தின் தலைவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். .அவருடைய அந்த முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதுடன் எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.
