நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பாலஸ்தீன பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விசா மறுத்துள்ளமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பிரிவு பேச்சாளர் அனுவார் எல் அனூனி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் அமைந்துள்ள நிலையில், ஐ.நா.வுடனான தற்போதைய தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அமெரிக்காவின் விருந்தோம்பல் நாடு என்ற பொறுப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா விசா மறுத்துள்ள நிலையில், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் உரையாற்றுவதற்கு அனுமதிக்கும் தீர்மானம் கடந்த 17ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு 152 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பராகுவே ஆகிய 3 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. நான்கு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.
எனவே, எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்மட்ட விவாதத்தில், மஹ்மூத் அப்பாஸின் உரை முன்பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது.
பாலஸ்தீன பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான அமெரிக்காவின் விசா மறுப்பு குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


