ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11ஆம் திகதிகளில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 10,167 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் ஜெய்ப்பூர், அஜ்மீர், ஆழ்வார், உதயப்பூர், கோட்டா, பில்வாரா ஆகிய 6 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகித்தது.
தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 150 வார்டுகளில் பாஜக 95 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும், இதர வேட்பாளர்கள் 12 இடங்களிலும் முன்னிலை பெற்றனர்.
காங்கிரஸ் கட்சி ஜோத்பூர், பாலி, பிகானீர் ஆகிய 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது.
ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சரிசமமான இடங்களைப் பிடித்தன.
பரத்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 36 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
இதுவரையிலான முடிவுகளின்படி, மாநகராட்சிகளின் 403 வார்டுகள் உட்பட மொத்தம் 4,049 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சி 300 மாநகராட்சி வார்டுகள் உட்பட மொத்தம் 3,456 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 2,438 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

