மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் இரவு வேளைகளில் உலா வந்த இம்முதலை, பொதுமக்கள் வளர்த்து வந்த கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடி உண்டு வந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தொடர் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், வழமை போல் இரவு வேளையில் தோட்டக் காணி வழியாக முதலை ஊடுருவுவதை அவதானித்த காணி உரிமையாளர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சுருக்கு வைத்து முதலையைப் பிடித்துக் கட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



