முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா 11.08.2026 அன்று முள்ளியவளை காட்டாவிநாயர் ஆலய முன்றலில் பி.ப 4.30 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.விஜயகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் ஏற்பாட்டிலும் சிறப்புற நடைபெற்றது.
பாரம்பரிய பண்பாட்டினை பேணிடும் நோக்கிலும் எதிர்கால தலைமுறையினருக்கு கலை கலாசார மரபுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலும் குறித்த பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
விழாவின் ஆரம்பத்தில் முள்ளியவளை சந்தைக்கு முன்பதாக பிரதேச பண்பாட்டு மரபினை, வாழ்வியலை , கலையினை பிரதிபலிக்கும் வெளிப்பாடாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி, கிராமிய கலைகளின் ஆற்றுகையுடன் விருந்தினர்கள் காட்டாவிநாயகர் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டனர்.
இன்றைய விழாவிற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இவ் விழாவின் சிறப்பம்சமாக நாடக வாரிதி கன்னியன் கனகசபை அரங்கு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலைஞர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ ‘சிரேஸ்ட கலைஞர் விருது’ ‘முல்லைப்பேரொளி’ விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திருமதி.ச.மஞ்சுளாதேவி, மாவட்ட உதவி, அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.கிருபவதனி சிவதீபன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் திரு.பிரான்சிஸ் கனியூட், கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் செல்வி.சர்மி, பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.தர்சன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சிவசங்கரி, மின் அத்தியட்சகர் இராசையா இரகுலேந்திரா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.ந.தசரதராஜகுமாரன், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

