ஆறு தமிழ், முஸ்லீம் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால் தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா என முடிவு எடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கிறதா?
கடந்த கிழமை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்திலே என்னை கண்டு ‘பேசலாமா?’ என்று கேட்டு, “நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த முயற்சியிலே நானும் அதாவது தமிழ் தேசிய பேரவையும் வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.
எங்களுக்கு அந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய குழுவுக்கு அதை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு தீர்மானம் எடுக்கும்.
அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு எடுப்பதற்கு வந்து, நாங்கள் அந்த முயற்சி சம்பந்தமாக எங்களுக்கு தெளிவில்லை.
ஏனென்றால் நாங்கள் அதிலே இதுவரைக்கும் அது சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை பொறுத்தவரையில் அந்த தெளிவு எங்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே நாங்கள் முதல் அதிலே கலந்து கொள்வதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னம், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைகின்ற இடத்தில் வந்து நாங்கள் அது சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கலாம் என்பதை நாங்கள் அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம் என தெரிவித்தார்.

