கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தங்களது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க மீண்டும் இரண்டாவது கட்டமாக ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று (18) 25 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.
கடந்த 2017.01.31 ம் திகதி பிலவுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பித்த இவர்களின் தொடர் போராட்டம் காரணமாக 2017.02.28 அன்று ஒரு தொகுதி பிலவுக்குடியிருப்பு காணிகள் இலங்கை விமானப்படையின் வசமிருந்து விடுவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2017.03.01 தொடக்கம் கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேற வேண்டும் என கோரி மக்கள் தமது தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு பகுதியில் இராணுவ நுழைவாயிலுக்கு முன்பாக ஆரம்பித்தனர் பல வருடங்களாக இடம்பெற்ற தொடர் போராட்டம் காரணமாக வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் இருந்த காணிகளை இராணுவம் விடுவித்தது.
இருப்பினும் முழுமையாக காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து பல வருடங்களாக போராடிய போது அரச தரப்புக்களினால் உங்களுக்காக காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழிகளோடு இந்த தொடர் போராட்டத்தை மக்கள் 1111 ஆவது நாளில் நிறுத்தினர்.
இதன் பின்னர் இன்று வரை மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை ஆயினும் மக்கள் இது தொடர்பில் ஜனாதிபதி, ஆளுநர், மாவட்ட செயலாளர் என பலரிடமும் பலதடவைகள் தமது காணி விடுவிப்பு தொடர்பாக கோரியும் எந்த தீர்வுமற்ற நிலையில் போராடியே தமது நிலங்களை பெறுவது என்ற அடிப்படையில் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல வருடங்களாகத் தொடரும் இந்த நில உரிமைப் போராட்டத்தில், தங்களின் சொந்தக் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரக் காணிகள் முழுமையாகத் தங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை தங்களின் தார்மீகப் போராட்டம் ஓயாது என்பதை மக்கள் இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தி இன்று (18) 25 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.

