வடமாகாணத்தில் சாரதிகள், நடத்துநருக்கு சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு இன்று விஜயம் செய்தார்.
இதன்போது அமைச்சரை அதிகார சபையின் தலைவர் எந்திரி எஸ்.விமலேஸ்வரன் வரவேற்றதுடன், வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் உத்தியோகத்தர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.
தொடர்ந்து வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநருக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாரதிகள், நடத்துநர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு தெரிவிக்கத்தக்க வகையில் தொலைபேசி இலக்கம் பதிக்கப்பட்ட சீருடையானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் பயணிகளுக்கு வினைத்திறனான சேவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


