டித்வா புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளான பொது மக்களுக்கான அவசர உதவி பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் கீழ் இயங்கும் லைப் லைன்(life Line) தொண்டு நிறுவனத்தின் ஊடாக இன்று(25) வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டன.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரு கொடையாளிகளின் நிதிப் பங்களிப்பில், ‘லைஃப் லைன்’ (Life Line) அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறிப்பாக படுக்கை நோயாளிகளுக்கான விசேட மருத்துவ கட்டில்கள் மற்றும் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பள்ளி வாசல்களுக்கான கம்பளிகள் விநியோகிக்கப்பட்டது.
இவ்வுதவி திட்டத்தின் கீழ், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து அவதியுறும் மக்களின் நலன் கருதி தரப்பால்களும் (Tent) வழங்கி வைக்கப்பட்டன.
இவ் விசேட நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில், லைஃப் லைன் அமைப்பின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், உலமாக்கள், மதத் தலைவர்கள், முசலி தேசிய பாடசாலையின் அதிபர் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
