இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்த கபில் ரோச்சர், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ், பெரிய கருப்பன், அகர்சன் உள்ளிட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீர்கொழும்பு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் நீடிக்கப்டடு 90 நாட்களுக்கு மேலாக விசாரணை கைதிகளாக இருப்பதால் மீனவர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் மீனவ குடும்பத்தினர், மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
தமிழக அமைச்சரவையில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தூத்துக்குடி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மீனவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை பிரதமரை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் பேசி நல்ல முடிவை பெற்று தர வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 27ஆம் தேதி மீனவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
