வெசாக் வாரத்தில் மயிலிட்டி பகுதியில் கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளது எனவே இக் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.
எதிர்வரும் வெசாக் தினத்தில் அப்பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அனைத்து அரசியல்வாதிகள் அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் அனைவரையும் வருகை தருமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
