பாரம்பரியமான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விடவும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் தொழில்நுட்பக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தனக்கு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் (1 கோடி) பரவலாக்கப்பட்ட நிதியை கோட்டைப் பகுதியில் உள்ள 17 பாடசாலைகளுக்கும் பகிர்ந்து வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோட்டை பிரதேச செயலகத்தில் அதிபர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வழக்கமான வீதிப் புனரமைப்பு அல்லது கட்டிடப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை விட, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நவீன கல்வி உபகரணங்களை வழங்குவதே காலத்தின் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி கோட்டைத் தொகுதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமமான முறையில் இந்த நிதிப் பங்கீடு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


